Sivam Sivam

Sivam Sivam Song Lyrics In English


ஊஊஹ்ம்ம்
சிவாய நமஹ

ஜடாமுடி அவிழ்ந்திட
விழுந்த கங்கை பாய்ந்திட
கழுத்தில் தூங்கும் நாகமோ
விழித்தெழுந்து பார்த்திட
இடக்கையில் உடுக்கையை
எடுத்து நீ அடித்திட
நடக்கும் இந்தத் தாண்டவத்தை
விண்ணும் மண்ணும் கண்டிட

திறக்கும் நெற்றிக் கண்ணில் பட்டு
அரக்கரும் எரிந்திட
தெறிக்கும் அந்தத் தீயிலே
இருட்டு யாவும் தீர்ந்திட
எரிக்கும் தீ தணித்திட
இளம்பிறை அணிந்திட
பிறக்கும் ஒன்று இறக்கும் என்று
உன் சினம் உரைத்திட

உமையவள் தன் காதலால்
பெருஞ் சினத்தை ஆற்றிட
தவங்கலைந்த ஞானியர்
துதித்து உன்னைப் போற்றிட
பனிப்பொருப்பின் மீது
நீ சினம் குளிர்ந்து வீற்றிட
எமக்கு இங்கு காவலாய்
வேற் யாரை நாங்கள் ஏற்றிட

நமச்சிவாய நாமத்தை
நாம் உச்சரிக்கும் போதிலே
நமக்குள் இன்பம் பாயுமே
மனக்களத்தின் மீதிலே
புகழ்ந்து உன்னை பாடினோம்
உன் தாண்டவம் முடிந்திட
புயல் முடிந்த பூமியாய்
அவ் விண்ணுமே விடிந்திட

கழுத்தணிந்த வாசுகி
எம் ஆணவம் உணர்த்திட
உடல் அணிந்த தோலுமே
எம் அச்சம் யாவும் நீக்கிட
கரம் பிடித்த சூலமோ
மூலோகம் மொத்தம் ஆண்டிட
வரம் கொடுக்க உன்னை
யாம் தவம் கிடந்து வேண்டிட

தலை அணி இளம்பிறை
எம் நெஞ்சிலே எரிந்திட
கருநிறச் ஜடாமுடி
இவ்வண்டமாய் விரிந்திட
அவ் வானலோக தேவரும்
உன் பாதம் ரெண்டைத் தேடிட
உனை வணங்கும் போதிலே
மனம் மகிழ்ந்து ஆடிட

ஓம் நம சிவ ஓம்
சிவ சிவ ஓம்
சிவ சிவ சிவாய நம ஓம்
நம சிவ ஓம்
சிவ சிவ ஓம்

முக்கண்ணனின் நுதல்விழி
சினத்திலே திறந்திட
மனத்தினைக் கெடுத்திடும்
அக் காமனைப் பொசுக்கிட
மலைமகள் முலைகளில்
கலைபடைத்த நேசனே
நிலையில்லாத வாழ்விலே
நிலையென்றான ஈசனே

சிவம் சிவம் சிவம் சிவம்
அளிப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
அழிப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
எங்கெங்குமே சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
எம் நெஞ்சிலும் சிவம் சிவம்


ஓம் நம சிவாய(6)



நீள்கின்ற வானின் நீலமே
வாழ்கின்ற வாழ்வின் மூலமே
ஊழ்நீக்கிக் காக்கும் சூலமே
ஞாலத்தை வெல்லும் காலமே
ஆனந்தங் கொண்டு தாண்டவம்
நீ ஆடுகின்ற காட்சியை
ஆடாமல் நின்று காண்கிறோம்
நீ ஆட்சி செய்யும் மாட்சியை

வெறுப்புகள் அறுத்தனை
விருப்புகள் உதிர்த்தனை
நெருப்புகள் எரிக்கையில்
புகழ் துகள் உணர்த்தினை
கழுத்தில் நாகம் கொண்டனை
விழுங்கி நஞ்சு உண்டனை
உமைக்கு தேகம் தந்தனை
எமக்கு நீயே சிந்தனை

அண்டத்தை ஆளும் நாதனே
சித்தைக்கு வாய்த்த பித்தனே
முற்றும் உணர்ந்த சித்தனே
நிதம் நிகழ்த்தும் நித்தனே
திருத்திடும் அருத்தனே
அறுத்திடும் கருத்தனே
உறுத்திடும் செருக்கினை
நிறுத்திடும் ஒருத்தனே

உடுக்கையை எடுக்கையில்
இடும்பைகள் நடுங்கிடும்
அறக்கணே உன் பார்வையில்
துறக்கமே அடங்கிடும்
முக்கண்ணன் உந்தன் பார்வையால்
திக்கெட்டும் சோதி ஆகுமே
முக்கோடு இட்ட நெற்றியால்
முக்காலம் அற்றுப் போகுமே

சிவம் சிவம் சிவம் சிவம்
எடுப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
முடிப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
அளிப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
அழிப்பதும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்

விண்ணெங்கிலும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
மண்ணெங்கிலும் சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
எங்கெங்குமே சிவம் சிவம்
சிவம் சிவம் சிவம் சிவம்
எம் நெஞ்சிலும் சிவம் சிவம்